தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வீரப்பன் கூட்டாளிகள் இன்று அப்பீல் மனு
கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த பாலாறு கண்ணிவெடி விபத்தில் வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் உள்பட 22 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். இந்த வழக்கில், சந்ததன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இவர்களின் கருணை மனுவினை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, கடந்த 11 ஆம் தேதி நிராகரித்தார். இதனையடுத்து கர்நாடகாவில் உள்ள பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் 4 பேருக்கும் அடுத்த 14 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியானது. இதனால், தூக்கு தண்டனை கைதிகள் நால்வரின் குடும்பத்தினரும் கலக்கத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவினை அவசர மனுவாக ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், கடந்த சனிக்கிழமை மறுத்துவிட்டதை அடுத்து இன்று மேல் முறையீடு செய்யப்படும் என்று, பிலவேந்திரனின் வழக்குரைஞர் சாந்தா போனிக்ஸ் தெரிவித்தார்.
பெல்காம் இன்டெலகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரையும் ஞாயிற்றுக்கிழமை காலை சிறையில் சந்தித்துவிட்டு வந்த சாந்தா போனிக்ஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வீரப்பனின் கூட்டாளிகளான ஞானபிரகாசம், பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என வதந்தி பரவியுள்ளது. இதுஉண்மை அல்ல. இதை சிறை அதிகாரிகளும் மறுத்துள்ளனர். 4 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மேல் முறையீடு செய்யப்படும் என்றார் அவர்.
இந்த மனு வரிசைப்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர்தான் அவர்கள் தண்டனையில் இருந்து தப்புவார்களா? என்பது தெரியவரும்.