டிவிஎஸ் 50 ஓட்ட பழகியபோது கிணற்றில் விழுந்த அண்ணன், தங்கை நீரில் மூழ்கி பலி
திருப்பூர்: உடுமலை அருகே டி.வி.எஸ். 50 ஓட்டப் பழகிக் கொண்டிருந்தபோது 18 வயது கல்லூரி மாணவி தனது அண்ணனுடன் கிணற்றில் விழுந்து பலியானார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவாளவாடியைச் சேர்ந்தவர் தேவராஜ். கூலித் தொழிலாளி. அவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில் 2வது மகள் வனிதா(18). அவர் உடுமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது சித்தப்பா மகன் கதிர்வேல்(19). உடுமலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 15ம் தேதி இரவு வனிதா கதிர்வேலின் உதவியோடு தனது வீட்டுக்கு அருகே டிவிஎஸ் 50 ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தார். வனிதா வண்டியை ஓட்ட கதிர்வேல் பின்னால் அமர்ந்திருந்து கற்றுக் கொடுத்தார். அப்போது வனிதா பிரேக் என்று நினைத்து ஆக்சிலேட்டரை அழுத்திவிட்டார். இதனால் வண்டி வேகமாகச் செல்ல அவர் அலறினார். கதிர்வேல் சுதாரிப்பதற்குள் வண்டி ஒரு மேட்டில் எகிறியதில் அவர்கள் அருகில் உள்ள சுற்றுச்சுவர் இல்லா 40 அடி ஆழ கிணற்றில் விழுந்தனர். கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருந்தது.
வண்டி கிணற்றுக்கு வெளியே கிடந்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். கிணற்றுக்குள் விழுந்ததில் காயம் அடைந்த அவர்கள் நீரில் தத்தளித்தனர். இரவு நேரம் என்பதால் ஊர் மக்களால் உடனே அவர்களை காப்பாற்ற முடியவில்லை. அதற்குள் அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த உடுமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.