வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கை ரத்து செய்ய வேண்டும்: விஜயகாந்த்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரப்பன் கூட்டாளிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டு தடா சட்டம் மூலம் உச்சநீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரின் கருணை மனுக்களும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்து, தூக்குத் தண்டணையில் இருந்து அவர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்.ஏற்கனவே ஏறத்தாழ 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டார்கள். இதற்கு காரணம் என்று கருதப்படுகிற வீரப்பனும் இறந்து விட்டார்.
இவர்களும் தங்கள் இளமை காலத்தை சிறையிலே கழித்து விட்டார்கள். அவர்களுடைய நான்கு குடும்பத்தை சார்ந்த தாய்மார்களும், குழந்தைகளும் மிகுந்த மன வேதனையோடு இருக்கிறார்கள். இவர்களுக்கும், வீரப்பனுக்கும் சம்பந்தமே இல்லை என்று கதறி அழுகின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென மனிதாபிமானத்தோடு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.