சிறுதாவூரில் இருந்து கோட்டைக்கு வரும் ஜெயலலிதா
சென்னை: போயஸ்கார்டன் வீட்டில் மராமத்து பணிகள் நடப்பதால் சிறுதாவூரில் இருந்து இப்போது கோட்டைக்கு வந்து செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள பங்களாவிற்கு, அடிக்கடி வந்து செல்வது வழக்கம். சசிகலா நீக்கத்திற்கு பிறகு, இரண்டு முறை வந்து சென்றுள்ளார். அப்போது, சில மணி நேரங்கள் இருந்துவிட்டு, சென்னை சென்றார்.
இப்போது போயஸ்கார்டன் வீட்டில் மராமத்து பணிகள் நடைபெறுகிறது இதனால் கவர்னர் உரை முடிந்த உடன் சிறுதாவூர் சென்று விட்டாராம்.
போயஸ்கார்டன் வீட்டில் பழைய கிரானைட் கற்களை எடுத்துவிட்டு புதிய கிரானைட் கற்களை பதித்து வருகின்றனர். புதிய மாடிப்படி கட்ட இருப்பதாகவும் அந்த பணிகள் முடிவடைய ஒருமாதம் ஆகும் என்றும் கூறப்படுகிறது. எனவே பட்ஜெட் விவாதங்கள் தொடங்கும் வரை சிறுதாவூரில் இருந்துதான் அவர் கோட்டைக்கு வந்து செல்வாராம்.
முதல்வர் சிறுதாவூர் வந்து செல்வதால், வழிநெடுகிலும் வீட்டு சுவரில், அ.தி.மு.கவினர் முதல்வர் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர். பங்களா அமைந்துள்ள பகுதியில், போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.