வேளாண் துறையில் தமிழகத்துக்கு முதலிட விருது!
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் இந்தியா டுடே குழுமத்தின் மேலாண்மை ஆசிரியர் ராஜிவ் சந்தித்து, இந்தியா டுடே குழுமத்தின் சார்பில் தேசிய அளவில் வழங்கப்படும் விருதுகளில், பத்தாண்டுகளில் மிக முன்னேறிய மாநிலம் என்ற வரிசையில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது இடம் கிடைத்து இருப்பதாகவும், பெரிய மாநிலங்களில் வேளாண்மைத் துறையில் தமிழ்நாட்டிற்கு முதல் இடம் கிடைத்து இருப்பதாகவும் தெரிவித்து அதற்கான விருதுகளை நேரில் வழங்கினார்.
மேலும், இந்தியா டுடே குழுமத்தின் சிறந்த நகரத்திற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் வரும் 22-ந் தேடி நடைபெறவுள்ளதாகவும், கல்வி மற்றும் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்த நகரமாக சென்னையும், கல்வி மற்றும் சுற்றுச்சூழலில் வளர்ந்து வரும் சிறந்த நகரமாக மதுரையும், முதலீட்டை ஈர்ப்பதில் வளர்ந்து வரும் சிறந்த நகரமாக கோயம்புத்தூரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்து, இந்தப் பரிசுகளை நேரில் பெற்றுச் செல்ல அமைச்சர்களை அனுப்பி வைக்குமாறு இந்தியா டுடே குழுமத்தின் மேலாண்மை ஆசிரியர் முதலமைச்சர் ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டார்.
இந்தியா டுடே குழுமத்தின் மேலாண்மை ஆசிரியரின் வேண்டுகோளினை ஏற்று, நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி ஆகியோரை டெல்லிக்கு அனுப்பி வைப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.