அப்சல்குருவுக்கு அதரவான கருத்து: 55 ஃபேஸ்புக் பக்கங்களை முடக்கியது மத்திய அரசு
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்சல்குருவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனையொட்டி ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் அப்சல்குருவின் தூக்கினை விமர்சித்து தகவல்கள் வெளியாகி இருந்தன. மத்திய அரசின் உத்தரவின் பேரில் அந்த 55 பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.
அப்சல்குருவின் தூக்கு தண்டனை குறித்து இணையத்தளங்களில் ஆவேசமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. சில இணையத்தளங்களில் அப்சல்குருவின் மரணத்தை தியாகத்துக்கு ஈடாக போற்றி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த இணையத்தள பக்கங்களையும் முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
காஷ்மீர் மாநில மக்களிடையே இந்த இணையத்தள தகவல்கள் வேகமாக பரவின. இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் ஒருவாரமாக இணையத்தள சேவையை மத்திய தொலைத்தொடர்புத்துறை நிறுத்தி வைத்திருந்தது. என்றாலும் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக இணையத்தளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதனால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று கருதப்படுவதால் அந்த இணையத்தள பக்கங்ககளை முடக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக தற்போது 73 இணையத்தள பக்கங்கள் தடுக்கப்பட்டன.
அதேபோல் ஃபேஸ்புக் சமூக வளைத்தளத்தில் கிட்டத்தட்ட 55 பக்கங்களில் அப்சல்குரு மரணத்தை விமர்சித்து தகவல்கள் வெளியாகி இருந்தன. மத்திய அரசின் உத்தரவின் பேரில் அந்த 55 பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு கருத்து சுதந்திர ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்!