சபாஷ்... காணாமல் போன அக்கா வீட்டுக்காரரின் காரைக் கண்டுபிடித்த ஷிண்டேவின் இளைய மகள்!
சுஷில் குமார் ஷிண்டேவின் மருமகன் ராஜ் ஷ்ராப். இவரது பஜேரோ கார் சமீபத்தில் காணாமல் போய் விட்டது. மத்திய உள்துறை அமைச்சரின் காருக்கே மும்பையில் பாதுகாப்பு இல்லை என்பது போல பேச்சுக்கள் கிளம்பி விட்டன.
இதையடுத்து போலீஸார் விசாரணையில் குதித்தனர். கொலை வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் குற்றப் பிரிவு போலீஸாரையும் விசாரணையில் இறக்கினர். ஏகப்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மறுபக்கம் ஷிண்டே குடும்பத்தாரும் கார் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர். குறிப்பாக ஷிண்டேவின் இளைய மகளும், எம்.எல்.ஏவுமான பிரீனிதி ஷிண்டேவும் தனது அக்காள் கணவரின் கார் குறித்து விசாரித்து வந்தார்.
இந்த நிலையில், பந்த்ரா பகுதியில் ஒரு குடிசைப் பகுதிக்கு அருகே ராஜ் ஷ்ராப்பின் கார் பிரீனிதியின் உதவியால் மீட்கப்பட்டது.
சரி பிரீனிதி காரை எப்படிக் கண்டுபிடித்தார்...?
அதாவது பாலி ஹில் பகுதியிலிருந்து தனது காரில் ஒர்லி பகுதிக்குப் போய்க் கொண்டிருந்தாராம் பிரீனிதி. அப்போது சாலையில் தனக்கு முன்பா ஒரு பஜேரோ போவதைப் பார்த்தார். அது தனது அக்காள் கணவரின் கார் என்பதைக் கண்டுபிடித்தார். அவரது டிரைவர் மற்றும் பாடிகார்டும் அதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து அந்தக் காலை பிரீனிதியின் டிரைவர் துரத்தினார்.
அதேசமயம், பிரீனிதி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். ஆனால் பஜேரோ கார் தப்பி விட்டது.
இருப்பினும் பந்த்ரா பகுதி முழுவதும் தீவிரமாக வேட்டை நடத்தியதில் குடிசைப் பகுதி அருகே கார் அனாதரவாக விடப்பட்டது தெரிய வந்து மீட்கப்பட்டது.