சென்னை: 'வால்மார்ட்' நிறுவன குடோனுக்கு சீல் வைப்பு: சி.எம்.டி.ஏ அதிரடி நடவடிக்கை
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந் நிலையில் சென்னை வானகரம் அருகே உள்ள பள்ளிக்குப்பம் மதன கிராமத்தில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் பெரிய அளவிலான குடோனை கட்டி வருகிறது. 10 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இதில் 7 ஏக்கரில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஆனால் பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளிக்காத நிலையில் கட்டுமான பணி தொடர்ந்து நடந்து வந்தது.
இந் நிலையில் வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக வியாபாரிகள் குடோன் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கிடையே குடோன் கட்ட அனுமதி மறுத்து பெருநகர வளர்ச்சி குழுமம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து கட்டிட பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை மேலாளர் நாகலிங்கம் தலைமையில் சென்ற ஊழியர்கள் வால்மார்ட் கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.
அனுமதியின்றி கட்டிடம் கட்டியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையொட்டி அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவுக்கு வணிகர் சங்கம் பாராட்டு-நன்றி:
இந் நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வால்மார்ட் நிறுவனத்துக்கு இந்தியாவில் இதுவரை எங்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால் சூழ்ச்சியாக வால்மார்ட் நிறுவனம் 2008ல் இருந்து பார்தி வெஞ்சர் குழுமத்துடன் கூட்டணி வைத்து கொண்டு 18 மாதங்களில் வானகரத்தில் கடையை திறக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நடக்கிறது. தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழக முதல்வர் கொள்கை முடிவாக அறிவித்து வணிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.
ஆனால் வால்மார்ட் நிறுவனம் சட்டத்துக்கு புறம்பாக தமிழகத்தில் கால் பதித்து வருகிறது என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து சுட்டி காட்டி வந்தது.
பார்தி வால்மார்ட் நிறுவனம் அண்ணா நகரில் அலுவலகத்தையும், வானகரத்தில் கட்டிடத்தை கட்டி வருவதை தடை செய்யக்கோரி கடந்த மாதம் சென்னை வணிகர்கள் சார்பாக அடையாள முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் வானகரத்தில் கட்டப்பட்டு வரும் வால்மார்ட் கட்டிடத்துக்கு சி.எம்.டி.ஏவில் அனுமதி பெறப்படவில்லை என்ற அடிப்படையில் தற்போது அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வால்மார்ட்டை தடை செய்யும் முதல் நடவடிக்கையாக தமிழக அரசு எடுத்துள்ளது என்ற அடிப்படையில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபடும் பார்தி- வால்மார்ட் நிறுவனம் தமிழகத்தில் வணிகம் செய்ய முழுமையாக தடை விதிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.