ஜெ.தான் காப்பாற்ற வேண்டும், அவரை விட்டால் வேறு வழியில்லை - வீரப்பன் கூட்டாளிகளின் குடும்பத்தினர்
தமிழ்நாடு பழங்குடியினர் சங்கம் சார்பில் சென்னையில் அதிரடிப்படையினரின் அத்துமீறல்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் இந்த நால்வரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
அப்போது ஞானப்பிரகாசத்தின் மனைவியான செல்வமேரி செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது கணவர் கர்நாக மாநிலம் சாம்ராஜ்நகரில் பண்ணை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் 1993ம் ஆண்டு பாலாரில் குண்டுவெடிப்பு நடந்தது. ஆனால் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எனது கணவரை அதிரடிப்படையினர் கைது செய்து வீரப்பன் கும்பலுக்கு சாப்பாடு கொடுத்ததாக கூறி வழக்குத் தொடர்ந்தனர்.
எனது கணவர் வீரப்பனை பார்த்ததே கிடையாது. அவனது படத்தைத்தான் பார்த்துள்ளார். ஆனால் அவரை சிறையில் அடைத்து மரண தண்டனையும் விதித்துள்ளனர் என்றார்.
பிலவேந்திரனின் சகோதரி அமலோற்பவ மேரி கூறுகையில், எனது சகோதரர் பண்ணையில் கூலிவேலை பார்த்து வந்தவர். பம்ப் மெக்கானிக்காக இருந்து வந்தார். ஆனால் அவரை பொய்யான காரணத்தைக் கூறி கைது செய்து விட்டனர். அவரை முதல்வர் ஜெயலலிதாதான் காப்பாற்ற வேண்டும். அவரைவிட்டால் வேறு வழியில்லை என்றார்.
சைமனின் சகோதரர் ஜெயராஜும், முதல்வர் ஜெயலலிதாதான் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் வீரப்பன் வேட்டையின் நாயகியே ஜெயலலிதாதான் என்பதால் இந்த நால்வரின் குடும்பங்களுக்கும் அவர் உதவுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.