வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட மேலும் 6 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை!
1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறு என்ற இடத்தில் வீரப்பன் கூட்டாளிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதில் கர்நாடகத்தைச் சேர்ந்த அதிரடிப்படை போலீசார் 22 பேர் பலியானார்கள். இது தொடர்பாக வீரப்பனின் கூட்டளாகளான ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கை மைசூர் தடா நீதிமன்றம் விசாரித்து 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தி 2004ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து 4 பேரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுக்கள் கடந்த 12ம் தேதி நிராகரிக்கப்பட்டன. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இதையடுத்து மைசூர் தடா நீதிமன்றத்தில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதியை குறிப்பிடுமாறு கர்நாடக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் 4 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனுத்தாக்கல் செய்து தூக்கு தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மீது கடந்த திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் இன்று வரை (20.02.13) மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இன்று காலை தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதை மேலும் 6 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
இது தொடர்பான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதால் அதுவரை தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
மேலும் வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இதனால் வீரப்பனின் கூட்டாளிகளின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிராக தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.