ஊழலை தடுக்க என்ன செய்றதுண்ணு தெரியலையே?.... ஏ.கே. அந்தோனி ஆதங்கம்
டெல்லியில் நேற்று நடைபெற்ற ராணுவ கருத்தரங்கில் அமைச்சர் ஏ.கே.அந்தோணி கலந்துகொண்டு பேசியதாவது: "ஹெலிகாப்டர் ஊழல் போன்ற சர்ச்சைகளை தவிர்க்க, ராணுவ தளவாடங்களை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்குவதுதான் கடைசி விடையாக இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படை, நேர்மையை பின்பற்றுவதில் சமரசம் என்பதே இருக்கக் கூடாது என்றார்.
ஆயுத தொழிற்சாலை வாரிய ஊழலில் சம்பந்தப்பட்ட 6 ஆயுத நிறுவனங்களை மத்திய அரசு உடனடியாக கருப்பு பட்டியலில் சேர்த்தது. ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி எல்லாம் செய்தாலும் கூட, மற்றவர்கள் பாடம் கற்கவில்லை. எனவே, நமது நடைமுறையை மேலும் கடுமையாக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் எழும் போதெல்லாம், உண்மையை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும்" என்றார்.
ஊழலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், இங்கும் அங்குமாக ஏதாவது ஒரு இடத்தில் ஊழல் நடக்கத்தான் செய்கிறது. அதை தடுக்க, எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றும் ஒரு கட்டத்தில் வேதனையோடு குறிப்பிட்டார் அந்தோணி.
இங்கும் அங்குமாக ஏதாவது ஒரு இடத்தில் ஊழல் நடக்கிறது என்கிறார் இவர். ஊழலில் எண்ணிக்கை குறைவுதான்... ஆனாலும் அமவுன்ட் பெரிசா இருக்கே என்பதுதான் இந்திய மக்களின் ஆதங்கம்.