காஷ்மீருக்குள் நுழைய டொகாடியாவுக்கு தடை! விமான நிலையத்தில் தடுத்து வைப்பு!
ஜம்மு காஷ்மீரில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள சென்ற டொகாடியா, ஜம்மு விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் 4-ந் தேதி ரஜோரி மாவட்டத்தில் நீங்கள் சுற்றுப் பயணம் செய்த போது இரு சமூகத்தினரிடையே பதற்றத்தையும் மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதால் மாநிலத்துக்குள் நுழைய தடை விதித்திருக்கிறோம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் வேறுவழியின்றி ஜம்மு விமான நிலையத்திலேயே டொகாடியா முடங்கிக் கிடந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,ஜம்மு காஷ்மீர மாநில அரசின் பாரபட்சமான நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் கருத்து அறிய வந்தேன். ஆனால் இந்த மாநில அரசு ஜம்மு விமான நிலையத்திலேயே முடக்கி வைத்திருக்கிறது. நான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குள் நுழைந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று இந்த அரசு சொல்கிறது. நான் இந்தியக் குடிமகன். இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்றார் அவர்.
டொகாடியாவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கும் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு விமான நிலையத்துக்கு வெளியே வி.ஹெச்.பி. மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.