ஒடிஷாவில் ஒருவேளை உணவுக்கு வழியில்லை! தமிழ்நாட்டில் பட்டினிச் சாவு இல்லை..!!
சென்னை: ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் வடமாநில மக்கள் சிரமப்படுவதாக அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. சில மாநிலங்களில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுதான் கிடைக்கிறது என்கிறது அந்த புள்ளிவிபரம்.
தமிழ்நாட்டில் இலவச அரிசி உள்ளிட்ட திட்டங்களினால் பட்டினிச்சாவுகள் நிகழ்வதில்லை என்றும் அந்த புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் சமீபத்தில் அனைத்து மாநிலங்களிலும் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டது. அதில் பல்வேறு முடிவுகள் தெரியவந்தன.
இந்தியா முழுவதும் 1,00749 வீடுகள்
மொத்தம் ஒரு லட்சத்து 749 வீடுகளில் இந்த சர்வே நடத்தப்பட்டது. நாடெங்கிலும் 7428 கிராமங்கள், 5,262 நகர்ப்புறங்களில் இந்த சர்வே நடத்தப்பட்டது.
பட்டினியால் வாடும் மக்கள்
கடந்த 1993ம் ஆண்டு வரை பெரும்பாலான வடமாநில கிராம மக்களுக்கு ஒருவேளை உணவுதான் கிடைத்தது. தற்போது சற்றே உயர்ந்து இரண்டு வேளை உணவு கிடைக்கிறது.
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள கிராமப்புற மக்கள் ஒரு வேளை உணவுக்கே சிரமப்படுகின்றனர். வருடத்தில் பெரும்பாலான நாட்கள் பட்டினியாக இருக்கின்றனர்.
கிராமப்புற மக்களுக்கு உணவில்லை
அசாம், சட்டீஸ்கர் மாநில மக்களுக்கு ஒரு நாளைக்கு இரு வேளை உணவு கிடைக்கிறது. அங்குள்ள கிராமப்புற மக்களுக்கு ஒரு வேளை உணவு கிடைக்கிறது.
மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்திலும் இதே நிலை காணப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் கிராமப்புற மக்களுக்கு சாப்பாட்டுக்கு வழியில்லை. நகர்ப்புற மக்களுக்கு ஒரு வேளை உணவே கிடைக்கிறது. அதுவும் போதுமான அளவில் கிடைக்கவில்லை.
படிப்பறிவு இல்லாத மக்கள்
படித்தவர்கள் வாழும் மாநிலங்களில் பட்டினி பிரச்னை இல்லை. வட மாநிலங்களில் பெரும்பாலான கிராமப்புற மக்கள் இன்னமும் படிப்பறிவு இல்லாமலும், கலாசார மாற்றம் இல்லாமலும் வசிக்கின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சூப்பர்
ஏழை எளிய மக்களுக்கு உணவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. அதே போல ஆதரவற்றோருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் விவசாயம், தொழில் துறைகளில் வேலைவாய்ப்புகளும் பெருக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பட்டினி சாவு என்ற நிலை இல்லை.
மலிவு விலை உணவு
இலவச அரிசிக்கு அடுத்த படியாக இப்போது 1 ரூபாய் இட்லி, 5 ரூபாய் சாம்பார் சாதம், தயிர் சாதம் என சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏழைகள் பசியாற அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் மூலம் ஏழைகளுக்கு வயிறு நிறைய உணவு கிடைக்கும். இதை மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தினால் தமிழ்நாட்டில் பசியோடு தவிக்கும் மனிதர்களை காணமுடியாது.