திருச்சியில் கருணா தங்கியிருக்கிறாரா?: ஹோட்டலை முற்றுகையிட்ட இலங்கைத் தமிழர்கள்
சிங்கள எம்பி கருணா ரத்னா ஜெயசூர்யா, சீர்காழி அருகே உள்ள திருக்கடையூரில் ஆலய தரிசனம் செய்ய வந்தார். அங்கேயே அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இதையடுத்து அவர், மனைவி மற்றும் உறவினருடன் திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.
இந்த ஹோட்டலுக்கு அருகில் இலங்கைத்தமிழர்கள் முகாம் உள்ளது. அவர்களுக்கு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி, சிங்கள அரசிடம் சென்று, ஈழத்தமிழர்களின் துரோகி என்றழைக்கப்படும் கருணா வந்துவிட்டார் என்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து முகாமில் இருந்த இலங்கைத்தமிழர்கள் ஆவேசத்துடன் எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்குள் நுழைந்தனர். உடனடியாக கருணாவை வெளியேற்றவேண்டும் என்று வற்புறுத்தினர். இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினரும், போலீசாரும் வந்து, எம்.பி. கருணா ரத்னா ஜெயசூர்யாதான் இங்கு வந்து தங்கியுள்ளார் என்று கூறவே, அவர்கள் சமாதானம் அடைந்தனர்.
எனினும் இலங்கையிலும் இங்கேயும் இப்படி நாங்கள் அவதிப்படுகிறோம். இதற்கெல்லாம் காரணம் சிங்கள அரசுதானே என்று கூறிய இலங்கைத் தமிழர்கள் சிங்கள எம்.பி. தங்கியிருந்த ஓட்டலை பார்த்து தாக்க முற்பட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் அவர்களை ஹோட்டலில் இருந்து அப்புறப்படுத்தினர்.