லண்டனில் ஃபேஸ் புக் சிபாரிசு செய்த மருந்து சாப்பிட்டு இந்திய மாணவர் பலி
ஹைதராபாத்தின் மில்லியனர் ஒருவரின் மகன் சர்மத் அலாதின். 18 வயது மாணவரான இவர், லண்டனில் படித்து வந்தார். பெர்ன்ஹாம் பல்கலைக்கு அருகே சர்ரேய் என்ற இடத்தில் எப்சம் பகுதியில் வசித்து வந்த இந்த மாணவர், பல்கலை சார்பிலான தங்கும் இடத்தில் இருந்துள்ளார். தனது குண்டான தோற்றத்தை குறைத்து உடலைக் கட்டாக வைத்துக் கொள்ள எண்ணினார்.
பேஸ்புக் சமூக வலைப்பக்கத்தில் டிஎன்பி என்று கூறப்படும் சதைகுறைப்பு மருந்து பற்றிய விளம்பரம் வெளியாகவே அதை வாங்கி உட்கொண்டுள்ளார் அலாதீன். இதனை எடுத்துக் கொண்டதும், பேஸ்புக்கில் அவ்வப்போது தனது சதைகள் உருண்டு திரண்டு வருவது போல் முஷ்டியை மடக்கி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென்று மரணத்தை தழுவினார் இந்த மாணவர்.
இவரின் மரணம் பற்றி கருத்து கூறியுள்ள அவரது நண்பர் "இப்படி எல்லாம் உடலுக்கு எடுத்துக் கொண்டு உடனே மாற்றி விடமுடியாது, அதுபோன்ற பேர்வழியும் அல்ல அலாதீன். உன்னை இந்த மருந்து குறித்து தவறாக வழி நடத்துகிறார்கள் என்று நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன் ஆனால் அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. அவர் இறந்தபோகும் வரை நான் அழுது தீர்த்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
இவரது மருத்துவ அறிக்கை குறித்து தெரிவித்த மருத்துவர்கள், இந்த மாணவர் எடை குறைக்கும் மாத்திரைகளை அதிகம் உட்கொண்டதால், சதையை அது எரித்து உயிரிழப்புக்குக் காரணமாகிவிட்டது என்று கூறியுள்ளனர். உலகில் பல்வேறு உயிரிழப்புகளுக்குக் காரணமான டிஎன்பி என்ற வகை மருந்தினைக் கொண்ட மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டதாலேயே இவர் மரணமடைய நேரிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
புதன்கிழமை இரவு அலாதீனின் மரணத்தைக் கேள்விப்பட்டு, ஹைதராபாத்தில் இருந்து அவரது குடும்பம் லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
மாணவர் அலாதீன் நடவடிக்கை குறித்து பல்கலையும் எச்சரிக்கை விடுத்திருந்ததாம். பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் இந்த மருந்துகள் குறித்து எச்சரிக்கை அறிவிப்பும் அளித்துள்ளது.
இந்த மருந்து குறித்து ஆய்வுமுடிவுகளை அறிந்த அதிகாரிகள் குழு, சுமார் 60பேரின் மரணத்துக்குக் காரணமாக இந்த மருந்து உள்ளது என்று கூறியுள்ளனர். டிஎன்பி என்ற இந்த மருந்து, பல்வேறு பெயர்களில் இருந்தாலும், 2,4-டிரினிட்ரோபீனால் என்ற மருந்துவகையைக் கொண்டது.