ஹைதராபாத் குண்டுவெடிப்பில் தீவிரவாதி மகபூலுக்குத் தொடர்பா? போலீஸ் சந்தேகம்
ஹைதராபாத்தில் குண்டு வெடித்த இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட வெடிகுண்டு துகள்களை போலீசார் சோதனை செய்தனர். கடந்த 2007-ம் ஆண்டு ஹைதராபாத்தை உலுக்கிய குண்டு வெடிப்பில் இதே ரக வெடிகுண்டுதான் பயன் படுத்தப்பட்டு இருந்தது.
இந்த ரக குண்டுகளை தயாரிப்பதில் இந்திய முஜாஹிதீன் அமைப்பின் சையத் மகபூல் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.. புனே குண்டுவெடிப்பு வழக்கில் தற்போது திஹார் சிறையில் இருக்கிற மகபூல்தான் தற்போதைய குண்டுவெடிப்பின் மூளையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதையடுத்து மகபூலிடம் விசாரணை நடத்த ஆந்திர போலீசார் டெல்லி சென்று விசாரித்துள்ளனர். இதேபோல் ஆந்திர மாநிலம் வாரங்கலைச் சேர்ந்த மாவோயிஸ்ட் அஜன் கோரி மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மகபூலின் கூட்டாளிகளான இம்ரான், ஆசாத் மற்றும் இர்பான் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.