சென்னையில் ஆசிட் வீச்சில் பலியான வித்யாவின் கண்கள் தானம்
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வித்யா. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். அவரது தாய் கூலி வேலை செய்து தனது மகள் மற்றும் மகனை காப்பாற்றி வருகிறார். வித்யா 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு அதே பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அவரது அண்ணன் விஜயும் குடும்ப வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் வித்யா மீது அதே பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவர் ஆசிட் ஊற்றினார். அவர்களின் திருமணம் தள்ளிப் போனதால் ஆத்திரமடைந்த அவர் வித்யா மீது ஆசிட் ஊற்றினார். இதில் படுகாயமடைந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யா இன்று மரணம் அடைந்தார்.
உயிருடன் இருக்கையில் கண்தானம் செய்ய விரும்புவதாக வித்யா கூறி வந்துள்ளார். இதையடுத்து அவர் இறந்த பிறகு அவரது விருப்பப்படி அவருடைய கண்கள் தானமாக அளிக்கப்பட்டன என்று அவரது தாய் தெரிவித்தார்.