சென்னையில் ஆசிட் வீச்சு - சிகிச்சை பெற்ற மற்றொரு இளம் பெண் வித்யா உயிரிழப்பு
காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சுக்குள்ளாகி 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த காரைக்காலைச் சேர்ந்த வினோதினி கடந்த 12-ந் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் தமிழகம் மற்றும் புதுவையை உலுக்கியது. இந்த அதிர்வலைகள் மறைவதற்குள் அதேபோல் ஆசிட் வீச்சு சம்பவத்தில் மற்றொரு உயிர் பலியாகி இருக்கிறது.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இளம் பெண் வித்யா, அப்பகுதியில் இணைய மையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்ற் இளைஞர் வித்யாவை திருமணம் செய்ய வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் வித்யா மறுத்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த விஜயபாஸ்கர், வித்யா மீது ஆசிட்டை வீசியிருக்கிறார்
இதில் மிகவும் பாதிக்கப்பட்ட வித்யா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரை மஞ்சள் காமாலை நோயும் தாக்கியது. இதனால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.