கசாப், அப்சல் தூக்கிலிடப்பட்டதற்கான பழிவாங்கலாக ஹைதராபாத் குண்டுவெடிப்பு இருக்கலாம்- ஷிண்டே
இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் மற்றும் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கின் குற்றவாளி அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஏதாவது ஒரு ரூபத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்த்தோம். இதுதொடர்பான உளவுத் தகவல்களையும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி உஷார் படுத்தினோம்.
நாடு முழுவதும் உளவுத் தகவல்களை மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து அனுப்பி வருகிறோம். ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
சம்பவ இடத்திலிருந்து சில முக்கியத் தடயங்கள் கிடைத்துள்ளன. அவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் விரைவில் கிடைக்கப் பெறும்.
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் அமைப்பது குறித்து தொடர்ந்து மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் பல மாநிலங்கள் இதை எதிர்த்து வருகின்றன. ஆனால் இந்த மையம் அமைவது அவசியமாகும். இது ஹைதராபாத்தில் அமையுமா என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார் ஷிண்டே.