லஷ்கர் இ தொய்பா மிரட்டல் எதிரொலி: ஹைதராபாத்தில் பாதுகாப்பு தீவிரம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விரைவில் மீண்டும் குண்டுவெடிக்கும் என்று லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் கடந்த வாரம் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில் ஹைதராபாத்தில் விரைவில் மீண்டும் குண்டுவெடிப்புகள் நடக்கும் என்று லஷ்கர் இ தொய்பா அமைப்பு ஆந்திர மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில் கசாப், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்க லஷ்கர் இ தொய்பா ஹைதராபாத்தை தாக்கியிருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த யாசின் பட்கல் தான் ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் குண்டு வைத்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் லஷ்கர் இ தொய்பா மிரட்டல் விட்டுள்ளதால் ஹைதராபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்யப்படுகிறது. இது தவிர மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.