கடவுள் உத்தரவிட்டார், ஓய்வை அறிவித்தேன்- போப்பாண்டவர் உருக்கமான இறுதி உரை!
உலகெங்கும் வாழும் கத்தோலிக்க கிருஸ்துவர்களின் தலைமை மதகுருவான 85 வயதாகும் போப் 16-வது பெனடிக்ட், பிப்ரவரி மாதத்துடன் போப் பதவியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக கடந்த 11-ம் தேதி அறிவித்தார். அன்றாடப் பணிகளை மேற்கொள்ள தனது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று அவர் காரணம் கூறியுள்ளார். அவருக்கு மாற்றாக புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் பணியில் வாடிகன் அரண்மனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், பீட்டர் சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற வாராந்திர ஞாயிறு ஆராதனையில் 16ம் போப் பெனடிக்ட் பங்கேற்றார்.
போப் பதவியில் அவர் பங்கேற்கும் கடைசி ஞாயிறு பிரார்த்தனை என்பதால் சுமார் 1 லட்சம் பேர் வரை திரண்டிருந்தனர். அவரைப் புகழ்ந்தும், ஆதரவு தெரிவித்தும், வழியனுப்பும் விதமாகவும் வாசகங்கள் அடங்கிய அட்டையுடன் மக்கள் பங்கேற்றனர்.
ஆராதனைக்கு பின்னர் 16ம் போப் பெனடிக்ட் மக்களிடையே பேசியதாவது:
"மலையை ஏறி கடந்து வரும்படி என்னை ஆண்டவர் அழைக்கிறார்.அதன் பொருட்டு ஓய்வு பெறுமாறு கடவுள் இட்ட கட்டளையை ஏற்று செயல்பட்டுள்ளேன். இனிமேல் தொடர்ந்து அதிகமாக பிரார்த்தனை செய்வதிலும், தியானம் செய்வதிலும் எனது நேரத்தை செலவிடப் போகிறேன். நான் இந்த தேவாலயத்தை கைவிட்டுச் செல்லவில்லை. நாம் எப்போதுமே நெருக்கமாக இருப்போம்.என் மீது அன்பு செலுத்தி மிக அதிகமானவர்கள் இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி' என்று உருக்கமாக போப் பேசினார்.