ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகளுக்கு 47,000 பணியிடங்கள்: பன்சால்
மக்களவையில் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ரயில்வேத் துறையில் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், விபத்துக்களை தவிர்ப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பணியிடம்
சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக 47 ஆயிரம் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.
ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரிகளின் பொருளாதார மேலாண்மை திறனை வளர்க்க, இந்தியன் ரயில்வே இன்ஸ்டிட்யூட் அமைப்பு செகந்தராபாத்தில் நிரந்தரமாக ஏற்படுத்தப்படும்.
ரயில்வே பற்றி விவரங்களை அறிந்து கொள்ள தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1800111321 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ரயில்வே பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில், ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகளும், எஸ்கலேட்டர்களும் விரைவில் வைக்கப்படும்.
விபத்துகளை தடுக்க
ரயில்வே கிராஸிங்குகளை மாற்ற 17 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும். ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை கருவி இணைக்கும் பணி விரைவில் துவங்கப்படும். ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதை தடுக்கும் கருவி பரிசோதனையில் உள்ளது.
பெண்களின் பாதுகாப்பு
ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பே முக்கியம். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ரயில்கள் இயக்கப்படும். ரயில்வே விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் முன்னேற்றம் கண்டு ஸீரோ விபத்துக்கள் என்பதே லட்சியமாகும்.
ரயில்களில் பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்புக்காக, ரயில்களில் பெண் ஆர்பிஎப் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
பெண்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில், பெண்களுக்கான பெட்டிகள் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்தார்.