மத்திய பிரதேசத்தில் ரயில் ஏறி 2 குழந்தைகள் பலி: ரயில் நிலையத்திற்கு தீ வைத்த மக்கள்
மத்திய பிரதேசம் மாநிலம் குலாப்கஞ்சில் உள்ள மத்திய ரயில் நிலையத்தில் நடை மேம்பாலம் இல்லாததால் மக்கள் தண்டவாளத்தை கடந்தே ரயில் நிலையத்திற்கு செல்கின்றனர். இந்நிலையில் பயணிகள் ரயில் ஒன்று புறப்படப் போவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அந்த ரயிலைப் பிடிக்க பயணிகள் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் அடியில் படுத்து தண்டவாளத்தை கடந்து வந்தனர்.
அப்போது ரயில் நிலைய மாஸ்டர் தவறாக சரக்கு ரயிலுக்கு பச்சைக் கொடி காண்பித்துவிட்டார். இதையடுத்து அந்த ரயில் கிளம்பியதில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முகமது அலி(5) மற்றும் அவனுடைய 8 வயது சகோதரி உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் ரயில் நிலைய சொத்துக்களை சேதப்படுத்தி தீ வைத்தனர். இந்த கலவரத்தில் ரயில் நிலைய ஊழியர் ஒருவர் பலியானார். இதையடுத்து நிலைமை கட்டுக்குள் வரும்வரை டெல்லி-போபால் வழித்தடம் மூடப்பட்டது.