சட்டக் கல்லூரி ஆசிரியையை கன்னத்தில் அறைந்த சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. மகன் டிஸ்மிஸ்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆசிரியையை கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தைகளால் திட்டிய சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. பிரமோத் குப்தாவின் மகன் அபினவ் குப்தாவை அமிட்டி பல்கலைக்கழகம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவின் உறவினரும் அக்கட்சி எம்.எல்.ஏ.வுமான பிரமோத் குப்தாவின் மகன் அபினவ் குப்தா. அமிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வந்தார். அவர் கடந்த வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் வைத்து ஆசிரியை அர்ச்சனா ஷுக்லாவை கன்னத்தில் அறைந்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இது குறித்து அர்ச்சனா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட அபினவ் சிறிது நேரத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பல்கலைக்கழகம் அபினவ் குப்தாவை நேற்று டிஸ்மிஸ் செய்தது.
இதற்கிடையே அர்ச்சனாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஓராண்டாக குப்தா தனக்கு தொந்தரவு கொடுத்ததாக அர்ச்சனா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அர்ச்சனாவிடம் தவறாக நடந்து கொண்டதற்காக குப்தா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் ஆசிரியையிடமும், சட்டப்பிரிவு தலைவரிடமும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட பிறகு கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.