2ஜி விவகாரம்: பார்லி. குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பு கோரும் ஆ.ராசா
ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவர் முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா. இந்த ஊழல் பற்றி பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணையும் நடக்கிறது. இக் குழுவின் முன் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரி ஆ.ராசா சபாநாயகர் மீரா குமாருக்கும், பார்லிமென்ட் கூட்டுக்குழு தலைவர் பி.சி. சாக்கோவுக்கும் கடிதம் எழுதினார்.
இதனால் கூட்டுக்குழுவின் முன் ஆஜராக ஆ. ராசா அழைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்வியை பி.சி. சாக்கோவிடம் நேற்று செய்தியாளர்கள் கேட்டபோது, இதில் அனைத்து முக்கிய சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு விட்டதாக உறுப்பினர்கள் கருதுகின்றனர். நாங்கள் அறிக்கை எழுதுகிற நேரம் இது. ஆ. ராசாவை அழைப்பது குறித்து கூட்டுக்குழு உறுப்பினர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்பேன் என்றார் அவர்.