சங்கரசுப்பு மகன் கொலை வழக்கு: சிறப்பு குழு விசாரணை
சென்னை: வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ் மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பான விசாரணையை சிறப்பு குழு அதிகாரிகள் தொடங்கியிருக்கிறார்கள்.
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் சங்கரசுப்பு. இவரது மகன் சதீஷ்குமார் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஐ.சி.எப். ரயில்வே காலனியில் உள்ள குளத்தில் மீட்கப்பட்டது. இந்த வழக்கை திருமங்கலம் போலீசார் விசாரித்தனர்.
ஆனால், தன் மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கொலையில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும், எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சங்கரசுப்பு வழக்கு தொடர்ந்தார். இதனைதொடர்ந்து, வழக்கு விசாரணை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனடிப்படையில் நடந்த விசாரணையிலும், சதீஷ்குமார் தற்கொலை செய்துக் கொண்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு பிரிவை உருவாக்கி, தன் மகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சங்கரசுப்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, எஸ்.நாகமுத்து, பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் கொண்ட முழு பெஞ்ச் விசாரித்து 7.12.2012 அன்று உத்தரவிட்டனர். அந்த உத்தரவில், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனையடுத்து, ராகவன் தலைமையில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சிவானந்தம் உட்பட 18 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சதீஷ்குமார் சாவு குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இயங்கிவரும் இந்த சிறப்பு புலனாய்வு குழுவினர், சதீஷின் சடலம் மீட்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வரும் சிறப்பு குழு அதிகாரிகள், சதீஷ் மரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தொடக்கத்தில், இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் சதீஷ் மரணம் தற்கொலை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் சிபிஐயின் அறிக்கையை ஏற்காத உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற சிபிஐ இயக்குனர் ராகவன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.