நெல்லை-சங்கரன்கோவில் புதிய ரயில் பாதைக்கு சர்வே: விரைவில் அமைய கோரிக்கை
பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட் நெல்லை மாவட்ட மக்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. புதிய ரயில்கள் அறிவிப்பில் நெல்லைக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சமீப காலமாக புதிய ரயில் பாதைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே போடப்பட்ட ரயில் தடங்களில் கூட இன்று வரை ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக நெல்லை-சங்கரன்கோவில் புதிய வழித்தடத்திற்கு சர்வே விரைவில் நடக்க உள்ளது. இத்தடம் பேட்டை, புதூர், சேர்ந்தமரம், வீரசிகாமணி, வழியாக அமையும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அதிகாரிகள் இத்தடத்தை சர்வே செய்து எங்கெங்கு ரயில் நிலையம் அமைக்கலாம், பாலங்கள் அமைக்க வேண்டிய இடங்கள், எத்தனை கோடி செலவாகும் என அறிக்கை அளிப்பர். பின்னரே ரயில்பாதை அமைப்பது குறித்து ரயில்வே துறை ஆலோசிக்கும். வெகு காலத்திற்கு பின்னர் நெல்லைக்கு வந்துள்ள புதிய வழித்தடத்திற்கு ரயில்வே துறையின் அனுமதியை பெற்று தருவது இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் கையில்தான் உள்ளது.
எனவே இந்த ரயில் தடத்திற்கான சர்வேயை விரைவில் முடித்து வழித்தடம் ஏற்படுத்த நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.