சேனல் 4 ஆதாரங்கள் வெறும் உதாரணம் தான், மொத்தமும் வெளியே வந்தால் இலங்கை தாங்காது
இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சேனல் 4 நோ ஃபயர் ஜோன் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு வீடியோக்கள் கொடுத்து உதவியவர் இலங்கையைச் சேர்ந்த கண்ணன். இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தவர்களில் கண்ணனும் ஒருவர்.
இது குறித்து அவர் கூறுகையில்,
குறைந்த பரப்பளவு கொண்ட முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டிருந்தனர். ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் உணவு. பாதி பேர் அந்த ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் கடல் நீரைக் குடித்து குடித்தே இறந்தார்கள்.
தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்திடம் சரணடைய வந்தனர். அப்போது ராணுவத்தினர், நாங்கள் உங்களை சுட மாட்டோம். ஆனால் நீங்கள் அனைவரும் நிர்வாணமாக வந்து சரணடைய வேண்டும் என்றனர். வேறு வழி இன்றி தந்தை முன்பு மகளும், மகனின் முன்பு தாயும், அண்ணன் முன்பு தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர்.
வவுனியாவில் உள்ள மெனிக் பார்ம் முகாம் மற்றும் வெலிகந்தையில் உள்ள மறைமுக முகாம் ஆகியவற்றில் தினமும் இரவு நேரத்தில் பெண்கள் கதறும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இலங்கையில் இதுவரை 1.47 லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள்.
போர் நேரத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இலங்கை ராணுவம் பயன்படுத்தியது. கொத்தணி குண்டு 500 சிறிய குண்டுகளாகப் பிரிந்து பாய்ந்து தாக்கும்
. ஒயிட் பாஸ்பரஸ் கொத்தணி குண்டுகளை விட கொடூரம் ஆனது. ஒரே ஷாட்டில் 100க்கும் மேற்பட்ட குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் ஆக்சிஜனை உறிஞ்சிய பிறகு தான் வெடிக்கும். அதனால் அந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டபோது குண்டு பாதிப்பு போக பலர் மூச்சு திணறி இறந்தனர். சேனல் 4 வெளியிட்டுள்ள ஆதாரங்கள் அனைத்தும் வெறும் உதாரணங்கள் தான். மொத்தமும் வெளியே வந்தால் இலங்கை தாங்காது என்றார்.