ஒபாமாவின் ஆசிய போராட்டத்துக்கு ஆதரவாக நாமும் காய் நகர்த்த வேண்டும்- ருத்திரகுமாரன்
கடந்த ஞாயிறன்று மாலை அமெரிக்காவில் வபளோ நகரில் உள்ள விஞ்ஞான நூதன சாலை மண்டபத்தில் நடைபெற்ற தமிழீழ சுதந்திர சாசனக் கைநூல் வெளியீட்டு விழாவில் பேசிய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் விஸ்வநாதன் பேசுகையில், "தமிழீழ தேசத்தின் விடுதலை உடனடியாகக் கிடைக்காவிடினும் எமது போராட்டத்தின் மூலம் எமது காலத்திலேயே கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. முப்பது நாடுகள் விடுதலைக்காகப் போராடி உள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா கூட தனது போராட்டம் ஆசிய நாடுகளை நோக்கித்தான் எனக் கூறியுள்ளார்.
இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக அமெரிக்க நிபுணர்களும் எழுதி வருகின்றார்கள். எனவே ஒபாமாவின் ஆசியப் போராட்டத்துக்கு அமைவாக நாமும் காய் நகர்த்தினால் ஒரே புள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
'விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்வோருக்கு பதவிகள் வழங்கப்படுவதில்லை, பொறுப்புக்கள் தான் வழங்கப்படுகின்றன' என தலைவர் கூறியிருந்தார்.
அதைப் போலவே நாமும் எம்முடன் இணைந்து செயற்படுவோரிடம் முக்கியமான பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளோம்.
ஈழத் தமிழர்களை மாத்திரமல்ல இந்தியத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் ஆகியோரையும் பல்வேறு தமிழ் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்பட நாம் தீர்மானித்துள்ளோம்.
தமிழ் மக்களாகிய நீங்களும் எம்முடன் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும். இன்று ஊடகத்துறையினரும், பொது மக்களும் பெருமளவில் திரண்டு வந்திருப்பது எமக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்துகின்றது.
தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர் என்பதனை சர்வதேச அமைப்பினர்களுக்குப் புலப்படுத்தும் வகையில் நாம் நூறாயிரத்துக்கு மேற்பட்டோரது கையெழுத்தினை திரட்டவுள்ளோம்.
நாளை மலரவிருக்கும் தமிழீழம் எவ்வாறு இருக்கும் என்பதனை விடுதலை சாசனம் எடுத்து விளக்கும்.
நாம் சிறந்த வேலைத் திட்டத்தை முன்வைத்து செயற்படும் போது நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கிவிடும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்," என்றார்.
இந்த நிகழ்வில் வி.எஸ்.துரைராஜா, சுந்தரன் சின்னையா ஆகியோர் மங்கள விளக்கேற்றி கூட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
பிரதமரின் அலுவலகத்தில் பணியாற்றும் சாந்தி சிவசோதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
நாடு கடந்த தமிழீழ அரசின் மேலவைத் தலைவி உஷா ஸ்ரீஸ்கந்தராஜா வரவேற்புரை நிகழ்த்துகையில் தமிழீழ அரசு என்ற ஊர்தியை இழுத்துச் செல்லும் சக்தியே மக்கள். தமிழீழ விடுதலை சாசனக் கைநூல் வெளியிடப்படும் இன்றைய நாள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்றார்.
தமிழீழ சுதந்திர சாசனக் கைநூலின் முதல் பிரதியை தங்கவேலு வேலுப்பிள்ளை பெற்றுக் கொண்டார்.