அப்சல் குரு உடலைக் கேட்டு காஷ்மீரில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஸ்ரீநகர்: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கக் கோரி ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி, பிரிவினை வாத அமைப்பான முத்தாகிதா மஜ்லிஸ்-இ-முசாவரத் உள்பட சில அமைப்புகள் காஷ்மீரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துவதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குரு கடந்த மாதம் 9ம் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனது உடல் சிறை வளாகத்திலேயே புதைக்கப்பட்டது. அவனது உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவனது குடும்பத்தார் கேட்டனர். இந்நிலையில் அப்சல் குருவின் உடலை அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு ஆளும் தேசிய மாநாட்டு கட்சி பிரதமருக்கு கடிதம் எழுதியது. மேலும் காஷ்மீரில் உள்ள பல கட்சிகளும் இதே கோரிக்கையை விடுத்துள்ளன.
இந்நிலையில் அப்சல் குரு உடலை ஒப்படைக்கக் கோரி ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி, பிரிவினை வாத அமைப்பான முத்தாகிதாமஜ்லிஸ்-இ-முசாவரத் உள்பட சில அமைப்புகள் காஷ்மீரில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று காஷ்மீரில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் வங்கிகள், பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டதுடன் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகள் பெரும்பாலும் ஓடவில்லை. ஆனால் ஆட்டோ, டாக்சிகள் வழக்கம்போல் ஓடுகின்றன. இந்த முழு அடைப்பால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.