ஹெலிகாப்டர் ஊழலை விசாரிக்க சிறப்பு குழு அமைக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி
டெல்லி: ரூ.4,000 கோடி ஹெலிகாப்டர் ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விவிஐபிக்கள் பயணம் செய்ய இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதில் ரூ.4,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி 3 ஹெல்காப்டர்கள் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகஸ்டா வெஸ்ட்லேண்டுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஏற்கனவே இறங்கிவிட்டது. மேலும் இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே சிபிஐ குழு இத்தாலி சென்று வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹெலிகாப்டர் ஊழல் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கக்கோரி வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.