44 வயதுப் சீனப் பெண்ணுக்கு ஆறே முக்கால் அடி தலை முடி!
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த சென் யிங்குவான் என்ற பெண்ணின் தலைமுடியைப் பார்த்து அந்த ஊரே அதிசயித்துக் கிடக்கிறதாம். காரணம், 44 வயதான இவருக்கு ஆறே முக்கால் அடி நீளத்துக்கு தலைமுடி இருப்பதால். இதை அவர் கோதுவதையும், தண்ணீரில் அலசுவதையும் ஊரே கூடி வேடிக்கை பார்க்குமாம்.
கடந்த 11 வருடமாக இவர் தலை முடியை வெட்டியதே இல்லையாம். இவருக்கு சிறு வயதிலிருந்தே முடி வளர்ந்தபடி உள்ளதாம்.
தனது தலைமுடிக்கு தான் அடிமை என்று பெருமையுடன் கூறுகிறார் சென். தலைமுடியைக் காதலிப்பதாகவும், அதை உயிராக நினைப்பதாகவும் அவர் சொல்கிறார்.
அத்தோடு நில்லாமல் முடி கீழே உதிர்ந்து விழுந்தால் அதையும் விடுவதில்லையாம். அதையும் எடுத்து சேகரித்து வைக்கிறாராம். ஒரு நாளைக்கு இப்படி உதிர்ந்து விழும் முடியின் அளவு 50 கிராம் அளவில் இருக்குமாம்.
இவரது தலைமுடியை நீரில் அலசி, உலர வைப்பதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகுமாம்.
சென்னின் உயரம் 5 அடியாகும். ஆனால் அவரை விட ஒன்றே முக்கால் அடி அதிகமாக அவரது தலைமுடி உள்ளது. நடந்து போனால் தரையைத் தழுவியபடி இவரது தலைமுடியும் வருமாம். இதனால் முடியைத் தூக்கிப் பிடித்து முடிந்து போட்டுக் கொண்டுதான் நடப்பாராம்.
கடந்த 11 வருடங்களாக இவர் தனது தலைமுடியை மிகவும் கவனமாக பராமரித்து வருகிறாராம். மேலும், உதிர்ந்து விழும் முடியையும் கூட சேகரித்துப் பத்திரமாக வைத்து வருகிறாராம்.
நான்கு நாட்களுக்கு ஒருமுறை இவர் தனது தலைமுடியை அலசிக் காயப்போடுகிறாராம். இவர் வெளியில் போனால் தலைமுடியை வேடிக்கை பார்க்க கூட்டம் கூடி விடுமாம்.
இப்படியும் விசித்திரம்...