நம்ம எம்.ஜி.ஆர். விவகாரம் போல வெடிக்கும் வெனிசுலா அதிபர் சாவேஸ் பஞ்சாயத்து!
வெனிசுலா அதிபரான சாவோஸ் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது அவர் இறந்துவிட்டதாக வதந்தி கிளப்பப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்றும் வதந்தி பரவியது.
ஆனால் இதை அவரது உறவினர்களும் உதவியாளர்களும் மறுத்துள்ளனர். சாவேஸின் மூத்த சகோதரரான ஆடன் சாவேஸ் அந்நாட்டின் பரினாஸ் மாகாணத்தின் ஆளுநராக இருக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில், சாவேஸ் தொட்ர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் குணமடைவார் என்றார்.இது தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அந்நாட்டின் துணை அதிபரான நிக்கோலஸ் மடுரோ கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் எதிர்க்கட்சியினரோ, மடுரோ பொய் சொல்கிறார் என்று சாடியுள்ளனர். இன்னும் சில நாட்களில் உண்மை வெளியே வரும். மடுரோ, சாவேஸின் ஆதரவாளர்களர்களுக்கும் வெனிசுலா மக்களுக்கும் உண்மை நிலவரத்தை சொல்லவில்லை என்று சாடுகின்றனர். சாவேஸின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை பகிரங்கப்படுத்துங்கள் என்று போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.
தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பதவி வகித்த காலத்தில் உடல்நலக் குறைவால் அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நலம் பெற வேண்டி தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமும் வழிபாடுகளை நடத்தியது. அப்போது கூட எம்.ஜி.ஆருக்கு வேண்டியவர்களும் சரி,, எம்.ஜி.ஆருக்கு வேண்டாதவர்களும் சரி.. அவரது உடல்நிலையை வைத்து அரசியல் சித்து வேலைகளை செய்தனர்.
எம்.ஜி.ஆரால் இனி முடியாது...அதனால் ஆட்சிப் பொறுப்பை அவருக்கு நம்பிக்கையான என்னிடம் ஒப்படையுங்கள் என்று ஒருவர் கடிதம் எழுதினார். இன்னொருவரோ தன் ஆருயிர் நண்பர் வரும் வரை ஆட்சிப் பொறுப்பை தம்மிடம் ஒப்படையுங்கள் என்று பகிரங்கமாகவே பேசினார்.
இந்த பஞ்சாயத்துகளுக்கு சற்றும் குறைவே இல்லாமல் இருக்கிறது வெனிசுலா அதிபர் சாவேஸின் விவகாரம்!