பாரில் மூக்குமுட்ட குடித்துவிட்டு ஆபாச பாடல் பாடி தகராறு செய்த 4 எஸ்.ஐ.க்கள்
கோட்டயம்: பாரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பிறரிடம் தகராறு செய்த உதவி எஸ்.ஐ.க்கள் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உதவி எஸ்.ஐ.ஆக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு பிரிவு உபச்சார விழா நடந்தது. அதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். அப்போது விருந்துடன் மதுவும் பரிமாறப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட 4 உதவி எஸ்.ஐ.க்கள் நன்கு மது அருந்திவிட்டு அது போதவில்லை என்று அருகில் உள்ள பாருக்கு சென்று மூக்குமுட்ட மது அருந்தினர்.
போதை தலைக்கு ஏறிய பிறகு அவர்கள் நடக்கக் கூட முடியாமல் இருந்தனர். அப்போது அவர்கள் பாருக்கு வந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதைப் பார்த்த பார் ஊழியர்கள் அந்த 4 பேரையும் அழைத்துச் சென்று வெளியே விட்டுவிட்டு வந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர்கள் மீண்டும் பாருக்குள் வந்து ஆபாசப் பாடல்களைப் பாடி பிறரை வம்புக்கு இழுத்தனர். பாரில் தகராறு செய்யும் 4 பேரும் போலீசார் என்பதை தெரிந்து கொண்ட ஊழியர்கள் இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்கும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் பாருக்கு வந்து அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். இதற்கிடையே அந்த 4 பேரும் நைசாக பாரின் பின்புறமாக வெளியேறினர். அவர்கள் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.