தப்பு செய்யும் போலீஸுக்கு ராத்திரியில் காட்டில் 'டேரா'.. டேராடூன் காவல்துறை அதிரடி!
டேராடூன்: தவறு செய்யும் போலீஸாருக்கு டேராடூன் காவல்துறை புதிய தண்டனையை அறிவித்துள்ளது. அதாவது தங்களது பணியிலிருந்து தவறும் காவல்து்றையினர் ராத்திரி முழுவதும் காட்டில் கழிக்க வேண்டும் என்பதே இந்தத் தண்டனையாகும்.
இந்தத் தகவலை டேராடூன் மாவட்ட எஸ்.பி. கேவல் குராணா தெரிவித்துள்ளார். இதுகுறித்த சுவாரஸ்ய செய்தி....
உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூன் நகரில் தவறு செய்யும் போலீஸ் காரர்களுக்கு புதிய வகை தண்டனை அளிக்க காவல்துறை முடிவு செய்திருக்கிறது. அவர்கள் ஒரு நாள் முழுவதும் காட்டில் தனியாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த தண்டனை.
இது தொடர்பாக சீனியர் எஸ்.பி. கேவல் குராணா கூறுகையில், புகாருக்கு உள்ளாகும் போலீஸார் முதல் பதினைந்து நாள்களுக்குள் தங்களது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கப்படும். அந்த நாள்களில் சீருடை அணிந்து,துப்பாக்கியைத் தோளில் சுமந்தவாறு, வெறும் கால்களில் அணிவகுப்பு செய்யும் வழக்கமான தண்டனை உண்டு.
பதினைந்து நாள்களுக்குள் தங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் அவர்களை காட்டுக்கு அனுப்புவோம். நடுக்காட்டில் 24 மணி நேரம் அவர்கள் தனியாக பொழுதை கழிக்க வேண்டும்.
அவர்களின் அத்தியாவசிய தேவையான அரிசி, பருப்பு வகைகள் மற்றும் இரண்டு தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படும். தவறு செய்த போலீஸ்காரர்கள் திருந்துவதற்கான வாய்ப்பாக இது அமையும் என்றார்.
ஒரு வேளை நாட்டை விட காடு சூப்பரா இருக்கே என்று அங்கேயே அவர்கள் செட்டிலாகி விட்டால்... அதுகுறித்து எஸ்.பி. எதுவும் விளக்கவில்லை.