5ம் தேதிக்குள் பாணதீர்த்த அருவிக்கு மீண்டும் படகு போக்குவரத்து
நெல்லை: பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வரும் 5ம் தேதிக்குள் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்குவது என்று நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் உள்ள புலிகள் காப்பக பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் சில நிபந்தனைகளுடன் தடையை நீக்கியது. இதையடுத்து நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது சம்பந்தமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 7ம் தேதி முண்டந்ததுறை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் பாபநாசம் அணையில் இருந்து பாணதீர்த்த அருவிக்கு படகு போக்குவரத்து நடத்த அனுமதி வழங்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பாணதீர்த்த அருவிக்கு படகு போக்குவரத்து தொடங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து பாபநாசம் முண்டந்துறை வனச்சரக அலுலவகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாணதீர்த்த அருவிக்கு வரும் 5ம் தேதிக்குள் படகு போக்குவரத்து துவங்கவும், தற்போதுள்ள 24 படகுகளை மட்டும் அதிகம் சத்தம இல்லாமலும், சுற்றுச்சூழல் கெடாமலும், ஆயில் உள்ளிட்ட கழிவுகள் அணையில் கலக்காமலும் இயக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இதுவரை மாஞ்சோலை பகுதி வரை மட்டும அனுமதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இனி குதிரைவெட்டி வரை செல்ல அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.