ஜலந்தரில் பள்ளி பஸ், டிரக் நேருக்கு நேர் மோதல்: 12 குழந்தைகள் பலி
ஜலந்தர்: ஜலந்தரில் பள்ளி பேருந்தும், செங்கல் ஏற்றி வந்த டிரக்கும் நேருக்கு நேர் மோதியதில் 12 குழந்தைகள் பலியாகினர் என்று கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ளது அகல் அகாடமி பள்ளி. அந்த பள்ளி பேருந்து இன்று காலை சுமார் 35 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே செங்கல் ஏற்றி வந்த டிரக்கும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 12 குழந்தைகள் பலியாகினர். இந்த விபத்தில் பேருந்து டிரைவரும் பலியானார்.
மேலும் 14 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர். டிரக் தவறான பாதையில் வந்ததால் தான் விபத்து ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் இருந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் 10 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் பேருந்தில் ஏறிய 10வது நிமிடத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.