பல் மருத்துவக் கவுன்சிலுக்கு லஞ்சம் .. கோர்ட்டில் ஆஜரான பங்காரு அடிகளாரின் மகன்கள்
சென்னை: மேல்மருவத்தூரில் உள்ள பங்காரு அடிகளாருக்குச் சொந்தமான ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் படிப்புக்கு அனுமதி பெறுவற்கு பல் மருத்துவக் கவுன்சிலுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான வழக்கில் சிபிஐ கோர்ட்டில் பங்காரு அடிகளாரின் மகன்கள் இருவரும் நேரில் ஆஜரானார்கள்.
மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பல்மருத்துவ கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு தொடங்க அனுமதி பெறுவதற்கு இந்திய பல்மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகேசனுக்கு லஞ்சம் கொடுத்தாக சி.பி.ஐ. கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகளான பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு, அவரது மகன்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.
இதையடுத்து மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினர். நீதிமன்றம் 3 பேருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இருநபர் ஜாமீன் வழங்கி முன்ஜாமீன் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, லஞ்சம் கொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி இவர்கள் இருவரும் சி.பி.ஐ. அதிகாரி முன்பு நாளை விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.