சாதிச் சான்றிதழ் கேட்டு காட்டு நாயக்கன் சமுதாயத்தினர் உண்ணாவிரதம்
தூத்துக்குடி: சாதிச் சான்றிதழ் கேட்டு காட்டு நாயக்கன் சமுதாயத்தினர் தூத்துக்குடியில் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
காட்டு நாயக்கன் சமுதாயம் தமிழகத்தில் ஆங்காங்கே குடிசையில் வாழ்க்கையை கழித்து வறுமையோடு வாழ்ந்து வரும் சமுதாயம். இந்த சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகள் அதிகபட்சம் பத்தாவது வகுப்பிற்கு மேல் படிக்க முடியாமல் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் காட்டு நாயக்கன் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வாழும் காட்டு நாயக்கன் இன மக்களுக்கு மட்டும் சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்திய அரசியல் சட்டத்தில் குடிமக்கள் நாட்டில் எந்த பகுதியில் வேண்டும் என்றாலும் வாழலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி பல்வேறு பகுதிகளில் வாழும் காட்டு நாயக்கன் இன மக்களுக்கு பாரபட்சமின்றி சாதிச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு காட்டு நாயக்கன் சமூக சீர்திருத்த சங்கத்தினர் இன்று தூத்துக்குடியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இந்த உண்ணாவிரதத்தில் எம்.எல்.ஏ.டில்லி பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சர்வதேச மனித உரிமை பாதுகாவலர் விருது பெற்ற மா.பரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பழங்குடியினத்தவர் துறை அதிகாரி மற்றும் மானுடவியல் துறை பேராசிரியர்கள் காட்டு நாயக்கன் என்றால் பன்றி மேய்ப்பர்கள். உங்கள் வீட்டில் பன்றியைக் காணவில்லையே? என்று ஏளனம் செய்து சாதிச் சான்று வழங்க மறுக்கின்றனர் என்று அம்மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.