யாரும் கேட்கல.. தேங்கிக் கிடக்கும் ரூ. 22,636 கோடி பி.எப் பணம்
டெல்லி: பி.எப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி அமைப்பிடம் உரிமை கோரப்படாத பணமாக ரூ. 22,636 கோடி நிதி தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிஎப் பணத்தை அதிக அளவில் உரிமை கோராத மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறத. அங்கு மட்டும் ரூ. 7427 கோடி அளவுக்கு முடங்கிக் கிடக்கிறதாம். அடுத்து தமிழ்நாட்டில் ரூ. 2433 கோடி பணம் முடங்கிப் போயுள்ளதாம்.
ஆந்திரபிரதேசத்தில் செயல்படாத பி.எப். கணக்குகள் மதிப்பு ரூ.1,797 கோடியாக உள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இது முறையே ரூ.2,052 கோடி மற்றும் ரூ.1,660 கோடியாகும். கடந்த 2011-12-ஆம் நிதி ஆண்டிற்கான இ.பி.எப்.ஓ. அமைப்பின் தணிக்கை செய்யப்படாத நிதி நிலை முடிவுகள் அடிப்படையில் மேற்கண்ட புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு பி.எப். கணக்கில் குறைந்தபட்சம் 36 மாதங்களுக்கு தொழிலாளர் சார்பில் தொகை எதுவும் செலுத்தப்படவில்லையென்றால், 37-வது மாதத்திலிருந்து அந்த கணக்கு செயல்படாத கணக்காக கருதப்படும். இந்த கணக்கில் உள்ள தொகைக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பு வட்டி எதுவும் வழங்காது.
மத்திய அரசின் திருத்த சட்டம் வாயிலாக கடந்த 2011 ஏப்ரல் மாதத்திலிருந்து செயல்படாத கணக்கில் உள்ள பி.எப். தொகைக்கு வட்டி வரவு வைப்பது நிறுத்தப்பட்டது.