இந்தியாவில் 42,800 கோடீஸ்வரர்கள்தான் இருக்கிறார்களா...??
டெல்லி: நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் பல விவாதங்களை எழுப்பியுள்ளது. சூப்பர் பணக்காரர்களுக்கு ப.சிதம்பரம் போட்டிருக்கும் எக்ஸ்ட்ரா நம்பர் அதாவது துணை வரியானது பெருவாரியான வரவேற்பைப் பெற்றாலும் கூட இது உரிய பலனை அரசுக்கும், சாதாரண மக்களுக்கும் தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது பட்ஜெட்டை பிப்ரவரி 28ம் தேதி தாக்கல் செய்தார். அதில் சாதாரண மக்களுக்கு பெரிய அளவிலான சுமைகள் ஏதும் இல்லை. அதேசமயம், பெரும் பணக்காரர்கள் அதாவது சூப்பர் ரிச் வகையறாவுக்கு கூடுதலாக 10 சதவீத துணை வரியை அவர் அறிவித்தார்.
இந்த புதிய துணை வரிக்கு பெரும் பணக்காரர்கள் மத்தியில் சின்னதாக ஒரு அதிருப்தி இருந்தாலும் கூட அதை அவர்கள் வரவேற்கவே செய்துள்ளனர். தங்களுக்கு நிறைய கொடுத்த சமுதாயத்திற்கு இந்த துணை வரி உதவட்டுமே என்ற நல்லெண்ணமே அதற்குக் காரணம்.
ஆனால் இந்தியாவில் மொத்தம் 42,800 பெரும் பணக்காரர்கள் இருப்பதாக கூறப்படுவதுதான் இங்கு இடிக்கிறது. மெய்யாலுமா என்ற கேள்வியும் எழுகிறது.
சூப்பர் ரிச் என்றால் என்ன...?
அதாவது வருடத்திற்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் சூப்பர் ரிச் என்ற வகையின் கீழ் வருகின்றனராம். ஒரு கோடியை டாலரில் சொல்வதாக இருந்தால் 1 லட்சத்து 80 ஆயிரம் டாலர் ஆகும்.
உலக அளவில் இது சாதாரண சம்பாத்தியம்தான்
உலக அளவில் ஒப்பிட்டால் இது சாதாரண சம்பாத்தியம்தான். மிகப் பெரிய பணக்காரர்கள் என்று இவர்களை பொத்தாம் பொதுவாக கூறி விட முடியாது. இருப்பினும் இந்தியாவைப் பொறுத்தவரை இது பெரிய விஷயம்தான்.
42,800 பேர்தானா சூப்பர் ரிச்??
இந்தியாவில் 42,800 சூப்பர் பணக்காரர்கள்தான் உள்ளனர் என்ற புள்ளிவிரவம்தான் இடிக்கிறது. இது உண்மையான எண்ணிக்கை அல்ல. உண்மையில் பார்த்தால் இதை விட 10 மடங்கு அதிகம் பேர் சூப்பர் பணக்காரர்களாக இருப்பார்கள் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
உதாரணத்திற்கு இதைப் பார்ப்போம்
நமது நாட்டில் சொகுசுக் கார்களை வாங்குவோரை வைத்தே சூப்பர் ரிச் பணக்காரர்களை அளவிட முடியும். ஒரு ஆடம்பரமான சொகுசுக் காரின் விலை சராசரியாக ரூ. 20 லட்சமாக உள்ளது. ஒரு கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோரால்தான் இந்தக் காரை சகஜமாக வாங்க முடியும்.
எத்தனை பேர் வாங்கினர்?
2010ம் ஆண்டு இதுபோன்ற சொகுசுக் கார்களை வாங்கியோரின் எண்ணிக்கை 15,068 ஆகும். 2011ல் இது 25,000 ஆக இருந்தது. 2012ல் இது 25,516 ஆக இருந்தது. ஆனால் இவர்கள் எல்லாம் தங்களது உண்மையான வருமானத்தை வருமான வரித்துறையிடம் காட்டியுள்ளனரா என்பது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள்.
ஆடியைப் பிடித்தால் சேதி தெரியுமே
இந்தியாவில் ஆடி, மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே சொகுசுக் கார்களை விற்பனை செய்கின்றன. எனவே இவர்களிடம் சொகுசுக்கார்களை வாங்கியோரின் வருமான வரி கணக்குகளை சரி பார்த்தாலே உண்மை நிலவரம் தெரிந்து விடும்.
வெறும் 42,800 என்பது நம்ப முடியாதது
எனவே 42,800 சூப்பர் பணக்காரர்கள்தான் இந்தியாவில் உள்ளனர் என்ற கணக்கு கட்டுக்கதையாகும. இதை விட பல மடங்குப் பேர் இந்தியாவில சூப்பர் பணக்காரர்களாக உலா வந்து கொண்டுள்ளனர் என்பதே உண்மையாகும்.
அத்தனை பேரையும் பிடித்தால் வரி கொட்டும்
எனவே இவர்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சூப்பர் ரிச் பணக்காரர்களையும் கண்டுபிடித்தால் அரசுக்கு இந்த 10 சதவீத துணை வரி மூலம் மிகப் பெரிய வருவாய் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அமைச்சர்கள்
நம் நாட்டில் உள்ள சாதாரண எம்.எல்.ஏக்களே மிகப் பெரிய பணக்காரர்களாக, கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதேபோல எம்.பிக்கள், அமைச்சர்கள். இவர்கள் அத்தனை பேரும் சூப்பர் ரிச் பட்டியலில் வருகின்றனரா என்பதை அரசு முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
எனவே இதையெல்லாம் அரசு முதலில் ஸ்டீர்லைன் செய்தாக வேண்டும்... அப்போதுதான் உண்மையான சூப்பர் ரிச் பார்ட்டிகள் அரசின் ஸ்கேனரின் கீழ் வருவார்கள்... ஏழை பாழைகளுக்கு ஏதாவது நல்லது நடக்க வழி கிடைக்கும்...