கசாப் என் கனவில் அடிக்கடி வந்து மிரட்டுகிறார்: அபு ஜுண்டால்
மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட அபு ஜுண்டால் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டார். அவர் தற்போது மும்பை ஆர்தர் ரோட்டில் உள்ள சிறையில் உள்ளார்.
மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய கசாப் கடந்த நவம்பர் மாதம் பூனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். இதையடுத்து தன்னையும் தூக்கிலிடுவார்களோ என்று ஜுண்டால் அச்சத்தில் உள்ளார். இந்நிலையில் அவர் தனது வழக்கறிஞரிடம் கூறுகையில், அஜ்மல் கசாப் அடிக்கடி என் கனவில் வந்து பயமுறுத்துகிறார். சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டபோதே மனதளவில் பாதிக்கப்பட்டேன். என்னை திகார் சிறையில் அடைத்தபோது மருந்து உட்கொண்டேன். தற்போது முதுகுவலியாக வேறு உள்ளது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஜுண்டாலின் உடல் நிலை குறித்து அவரது வழக்கறிஞர் மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜுண்டாலின் உடல்நலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
ஜுண்டாலுக்கு ஒன்றும் இல்லை. நலமாக உள்ளார் என்று சிறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் ஜுண்டாலின் மருத்துவ அறிக்கையை நாளை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.