மனித உரிமை மீறல் தவறுகளுக்கு இலங்கையே பிராயசித்தம் செய்யனும்: குர்ஷித்
லோக்சபாவில் இன்று இலங்கை தொடர்பான சிறப்பு விவாதத்தின் இறுதியாக சல்மான் குர்ஷித் ஆற்றிய பதிலுரை:
இங்கே விவாதத்தில் பங்குகொண்ட உறுப்பினர்கள் மிகவும் கவனத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர். அவையில் பேசிய உறுப்பினர்களின் உணர்வுகளை அரசும் பங்கெடுத்துக்கொள்கிறது. 27 ஆண்டுகளாக இலங்கையில் பிரச்சனையை தீர்க்க இந்திய அரசு உதவி வருகிறது. இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது.
உண்மையை ஏற்றுக்கொள்ள பரந்த மனம் வேண்டும். கடந்த காலத்தை பின்தள்ளி நாம் முன்செல்ல வேண்டும். இலங்கை பிரச்சனை தமிழ்நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல. இந்தியர் அனைவரின் பிரச்சனை. இன்று நாம் செய்யக்கூடியது நாளை நமக்கு எதிராக திரும்பிவிடக் கூடாது.
பிற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவதில்லை என்பது இந்தியாவின் கொள்கை. எந்த நாட்டையும் துண்டாடுவதை நாம் ஆதரிப்பதில்லை. நட்பு நாடாக இருந்தாலும் செய்வது தவறு என்றால் சுட்டிக்காட்டும் துணிவு இந்தியாவுக்கு உண்டு.
இந்தியா பெரியண்ணன் போல செயல்பட முடியாது. இந்தியா ஒன்றும் உலகின் போலீஸ்காரனும் கிடையாது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது தொடர்பாக பல ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. சம்பந்தப்பட்ட நாடே தாம் செய்த தவறை உணர்ந்து பிராயசித்தம் செய்ய வேண்டும். போரின்போது பெண்களுக்கு, குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு தீர்மானத்தை ஆதரிப்பதா, இல்லையா என முடிவு எடுக்கப்படும்