இலங்கை விவாதம்: சல்மான் குர்ஷித்தின் 'எரிச்சல்' பேச்சு- தமிழக எம்.பிக்கள் கூட்டாக வெளிநடப்பு
லோக்சபாவில் இன்று காலை முதல் பல்வேறு கட்சி எம்.பிக்களும் இலங்கையின் மனித உரிமை மீறல்களை, இனப்படுகொலையை சுட்டிக்காட்டி இந்திய அரசு , கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்
இந்த விவாதத்தின் முடிவில் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வகை செய்வோம். 13-வது அரசியல் சாசன திருத்தத்தைத் தாண்டியும் கூடுதலான அதிகாரங்களைப் பெற்றுத் தருவோம்.
இலங்கை அண்டை நாடு. அந்த நாட்டின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஆதாரங்கள் வெளியாகி இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை. முடிவெடுக்கும் போது உங்களின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படும்.
இலங்கை மீது கோபப்படுவது மட்டும் தீர்வாகிவிடாது. இலங்கையில் நடந்திருப்பது மிகப் பெரிய மனிதாபிமான பிரச்சனை. இதற்கு தீர்வு காண நீண்டகாலமாகும். இந்தியா பெரியண்ணன் பாணியில் அல்லது உலக போலீஸ்காரனாக செயல்பட முடியாது. என்று பேசிக் கொண்டிருந்தார்.
இதில் கடுப்பாகிப் போக திமுவின் டி.ஆர். பாலு எம்.பி., எப்பவுமே இதே பதிலை சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி கொந்தளித்தார். அதன் பின்னர் அவருக்கு ஆதரவாக அதிமுகவின் தம்பித்துரை காட்டம் காட்டினார்.
திரும்பவும் சொன்னதையே சல்மான் குர்ஷித் சொல்லிக் கொண்டிருக்க,, நீங்க இப்படி பேசிகிட்டே இருங்க..நாங்க வெளியே போகிறோம் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து தமிழக எம்.பிக்களும் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சல்மான் குர்ஷித் மீண்டும் பேசத் தொடங்கிய போது, பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா எழுந்து, தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேள்வி கேட்க வீடு கட்டிக் கடுத்தோம் என்று குர்ஷித் பேசினார். இதனால் பாஜகவினரும் அதிருப்தி அடைந்து கண்டனத்தையும் முழக்கத்தையும் பதிவு செய்து வெளிநடப்பு செய்தனர்.
சல்மான் குர்ஷித்தின் பேச்சுக்கு லோக்சபாவின் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிவிட சபையே காலியாகத்தான் இருந்தது.