ஜம்மு காஷ்மீரில் தொடரும் ஊரடங்கு- - கிலானிக்கு வீட்டுக் காவல்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானதால் பதற்றம் நீடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து முக்கிய நகரங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஹூரியத் தலைவர் கிலானி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் சில நாட்களுக்கு முன்பு போராட்டம் ஒன்றின் போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. பாரமுல்லா நகரில் நடைபெற்ற ஊர்வலத்தில் மக்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தனியார் சிமெண்ட் ஆலையின் வாகனம் ஒன்றை வன்முறையாளர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீநகர், பாரமுல்லா, பந்திப்போரா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் போலீசார் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தனர். இந்த ஊரடங்கு உத்தரவு இன்றும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் திரும்பிய ஹூரியத் தலைவர் கிலானி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.