டெல்லி டெசோ மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைவர்களை அனுப்பி வைத்த ராகுல் காந்தி
இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி டெசோ அமைப்பு சார்பில் மாநாடு டெல்லியில் நடந்தது. இதற்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்தார்.
மாநாட்டில் பேசிய ஸ்டாலின் கூறுகையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்ற நம்பிக்கையை டெசோ கருத்தரங்கு அளித்துள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டார். போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ள கோரிக்கை தான் பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
மேலும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தனது கருத்தை மிக வலிமையாக பதிவு செய்தார்.
ஆரம்பத்தில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் தர்ம சங்கடம் இருந்ததாம். ஆனால் இந்த விவகாரத்தை வைத்து காங்கிரசிடம் இருந்து திமுக விலக ஆரம்பித்துள்ளதை சுட்டிக் காட்டிய பிறகே ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்களை அனுப்பி வைத்தாராம்.
கூடவே, இது தமிழக விவகாரம் என்பதால் தமிழக கட்சி தலைவர் ஞானதேசிகனையும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினாராம். இதையடுத்தே சோனியா முழு அனுமதி வழங்கினாராம்.
இதன்மூலம் திமுக விஷயத்தில் காங்கிரஸ் தரப்பு இறங்கி வருவது உறுதியாகியுள்ளது.