சிரஞ்சீவி அழைப்பு…. காங்கிரசிஸ் சேர குஷ்பு திட்டம்…
சென்னை: கருணாநிதியுடன் கோபமாக இருக்கும் குஷ்பு விரைவில் காங்கிரசிஸ் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்தில் சிரஞ்சீவியை சந்தித்து பேசி உள்ளதாகவும், மார்ச் 15ம் தேதிக்குப் பின்னர் அவர் காங்கிரசிஸ் சேர வாய்ப்புள்ளது என்றும் குமுதம் ரிப்போர்ட்டரில் தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமைக்கும் குஷ்புவிற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல கடந்த 5 வாரங்களாகவே தொடர்ந்து குஷ்புவைப் பற்றி தகவல்கள் வாரஇதழ்களில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு ஆனந்த விகடனில் குஷ்பு பதில் சொன்னதால் திமுக வினர் கல்வீசி தாக்கினார்கள். இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் பதில் கொடுத்தார் குஷ்பு. இன்னொரு மணியம்மை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதவே அதற்கும் டுவிட்டரில் அடிதடி ஆகும் அளவிற்கு எழுதிக்குவித்தார் நக்கீரனில் பேட்டியும் கொடுத்தார். இப்போது குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர்.
குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி
திருச்சியில் குஷ்பு மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் கருணாநிதி பலமுறை தொடர்ப்பு கொண்டும் குஷ்பு பேசவில்லையாம். தன்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் பின்னர்தான் பேசுவேன் என்று கண்டிப்பாக இருக்கிறாராம் குஷ்பு.
ஆனால் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் ஒப்புக்கொள்ள மறுக்கிறாராம். இதற்கு பேராசிரியர் ஆதரவும் இருப்பதால் கருணாநிதியால் எதுவும் செய்ய முடியவில்லை.
மார்ச் 15 கெடு
கருணாநிதியுடன் பேச மறுக்கும் குஷ்பு வரும் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நான் ஒரு முடிவெடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் கெடு விதித்து இருக்கிறாராம். ஆனால் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிக்கிறாராம் கருணாநிதி.
சிரஞ்சீவியுடன் சந்திப்பு
குஷ்பு ஹைதராபாத்தில் இருந்தபோது மத்திய அமைச்சரும் நடிகருமான சிரஞ்சீவியை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது தனக்கு திமுகவில் ஏற்பட்ட அவமானம் பற்றிச் சொல்லி உருகினாராம். அப்போது சிரஞ்சீவி அவரை காங்கிரஸ் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தாராம்.
கட்டாயப்படுத்தி சேர்த்தனர்
உடனே குஷ்பு என் தந்தை கூட காங்கிரஸ் கட்சிதான். வழக்குகள் முடிந்த உடன் காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என்று நினைத்தேன். அப்போது ஆட்சியில் இருந்த சிலர் தன்னை கட்டாயப்படுத்தி திமுகவில் சேர்த்து விட்டனர். இதற்கு மேலும் என்னால் அந்தக் கட்சியில் தொடரமுடியாது.
தலைவர் மீது அன்பு உண்டு
கட்சித்தலைவர் கருணாநிதி மீது எனக்கு அன்பு உண்டு. என்னைத் தாக்கியவர்கள் மீது வரும் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறேன். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியில் சேருவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று சொல்லியிருக்கிறார் குஷ்பு.