ஹியூகோ சாவேஸ் மரணத்தில் அமெரிக்க சதி... ரஷ்ய தலைவர் திடுக் புகார்
வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் மரணத்தில் அமெரிக்க சதி உள்ளதாக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கென்னடி சியுகானவ் திடுக்கிடும் புகார் கூறியுள்ளார்.
அமெரிக்காவை எதிர்த்த தலைவர்கள் ஒன்று நேரடியாக கொல்லப்பட்டப்பட்டுள்ளனர். அல்லது சதியால் மரணத்தை தழுவ வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க எதிர்ப்பு கொள்கையைக் கொண்ட ஆறு இலத்தின் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் புற்றுநோய் தாக்கியதன் பின்னணி ஆராயப்பட வேண்டும் என்றும் ரஷ்யாவின் கென்னடி கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகத்தலைவர்கள் அஞ்சலி
மக்களின் நாயகன் என்றும் புரட்சித் தலைவர் என்றும் போற்றப்படும் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் மரணம் மக்களை மட்டுமல்ல பல நாட்டு தலைவர்களையும் உலுக்கிப் போட்டுள்ளது. நான்காவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டு 4 மாதங்கள் கூட முழுமையாக நிறைவு பெறவில்லை. அதற்குள் மரணதேவதையின் கையில் அகப்பட்டுவிட்டார் சாவேஸ் என்று பலரும் தங்களின் இரங்கல் செய்தியில் கூறிவருகின்றனர்.
வெனிசுலாவில் பல நாட்டுத் தலைவர்கள்
சாவேஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று வெனிசுலா தலைநகர் கரகஸ்ஸில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 33 நாட்டுத் தலைவர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 55 உயரதிகளும் பங்கேற்க உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆண்டிகுவா, பொலிவியா, பிரேசில், சிலி, உள்ளிட்ட நாட்டுத்தலைவர்கள் வெனிசுலா சென்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் சச்சின் பைலட் பங்கேற்கிறார்.
அமெரிக்க சதியாக இருக்கலாமோ?
நீண்டநாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சாவேஸ் இருதினங்களுக்கு முன்பு மரணத்தை தழுவினார். அவரது மரணம் பற்றி தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த கென்னடி சியுகானவ் சந்தேகம் எழுப்பியுள்ளார். ஹ்யூகோ சாவேஸ் அமெரிக்கச் சதியால் மரணமடைந்துவிட்டதாக உறுதிபட கூறியுள்ளார் கென்னடி.
தொலைக்காட்சி பேட்டியில் அதிர்ச்சி
ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கென்னடி, சாவேஸ் மட்டுமல்லாது அமெரிக்காவை எதிர்த்த, இலத்தின் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் புற்றுநோய் தாக்கியதன் பின்னணி ஆராயப்பட வேண்டும் என்றும் கூறினார்.
வலிமையான கூட்டணி
பிரேசில் அதிபர் டில்மா ரோஸ்செப், பிரேசிலின் முன்னாள் தலைவர் லூயிஸ் இனசியோ லுலாடா சில்வா, பராகுவே நாட்டின் பெர்னாண்டோ லூகோ, அர்ஜெண்டினாவின் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ், தற்போது வெனிசுலா அதிபர் சாவேஸ்ஆகியோர் உள்ளிட்ட ஆறு இலத்தின் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு புற்றுநோய் தாக்கி இருப்பதாக கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் அடாவடியை எதிர்த்து வலிமையான கூட்டணியை உருவாக்கியவர்கள்.
அமெரிக்காவிற்கு எதிரியான சாவேஸ்
சாவெஸ், அதிபர் பதவிக்கு வந்ததும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பை (OPEC) வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். ஈராக் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்த்ததோடு அப்போதைய ஈராக் அதிபரான சதாம் உசேனையும் சந்தித்துப் பேசினார். ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு போரை வெளிப்படையாக எதிர்த்தார். அமெரிக்க எதிர்ப்பாளரான கியூபா அதிபர் காஸ்ட்ரோவை தனது ஆசான் என்று போற்றி ஆதரித்த அவர், பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள கியூபாவுக்குச் சலுகை விலையில் பெட்ரோலிய எண்ணெய் கொடுத்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாவேஸ் உடல் நிலை
கென்னடியின் கருத்துக்கு முன்னதாகவே வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும் "சாவேஸ் ஏகாதிபத்தியத்தின் சதிக்கு பலியாகி விட்டார். நமது நாட்டின் நீண்டகால எதிரிகள், சாவேஸின் உடல் நிலைக்கு தீங்கு விளைவிக்க வழிகளை தேடி வந்தனர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எச்சரித்த ஃபிடல் காஸ்ட்ரோ
அமெரிக்காவினால் பலமுறை உயிருக்குக் குறி வைக்கப்பட்ட சாவேஸ், தன்னிடம் ஃபிடல் காஸ்ட்ரோ "'நீ மிகவும் கவனக்குறைவாக இருக்கிறாய். அவர்கள் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்துள்ளனர். நீ என்ன சாப்பிடுகிறாய், அவர்கள் உனக்கு என்ன சாப்பிட கொடுக்கிறார்கள், என்ன ஊசி போடுகிறார்கள் என்பதில் கவனமாய் இரு" என்று கூறியதாக முன்பு ஒரு முறை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் மரணத்தின் ரகசியத்தை யாராலும் அறிந்து கொள்ள முடியாது என்பதற்கு சாவேஸ் மரணம் ஒரு சான்று.