இந்தியாவில் பாக். பிரதமர்! அஜ்மீரில் வழக்கறிஞர்கள், வர்த்தகர்கள் போராட்டம் அறிவிப்பு
ஜெய்ப்பூர்: பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் அஷ்ரப் தமது உறவினர்களை உள்ளடக்கிய 28 பேர் கொண்ட குழுவுடன் இந்தியா வருகை தந்துள்ளார்.
இன்று காலை திட்டமிட்ட நேரத்தைவிட 30 நிமிடங்கள் தாமதமாக தமது குழுவினருடன் பர்வேஸ் அஷ்ரப் இந்தியா வருகை தந்தார். அவரை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வரவேற்றார் சல்மான் குர்ஷித் அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்ற பின்பு பர்வேஸ் அஷ்ரப் மாலை 3 மணியளவில் அஜ்மீர் தர்காவில் வழிபாடு நடத்த இருக்கிறார்.
அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் தலைகளைத் துண்டித்த சம்பவத்துக்கு மன்னிப்பும் கோராமல் துண்டிக்கப்பட்ட தலையை ஒப்படைக்காமலும் அந்நாட்டு பிரதமர் அஜ்மீருக்கு வருவதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.
அஜ்மீர் தர்காவின் தலைமை மதகுருதான் முதலில் எதிர்ப்பைப் பதிவு செய்தார். இவர்தான் இந்திய ராணுவ வீரர்கள் படுகொலை விவகாரத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
மேலும் அஜ்மீர் தர்காவுக்கு அஷ்ரப் போன்ற முக்கிய பிரமுகர்கள் வரும் போது பாதுகாப்பு காரணங்களுக்காக தர்கா வளாக கடைகள் மூடப்படும். இன்றும் கடைகள் மூடப்பட்டாலும் பாகிஸ்தான் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று கடை அடைப்புப் போராட்டம் நடத்துவதாக வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமரின் அஜ்மீர் வருகைக்கு வழக்கறிஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.