மீண்டும் தமிழக அமைச்சரவை மாற்றம்?: கிலியில் அமைச்சர்கள்
சென்னை: தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றியமைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அக்கடி அமைச்சர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும் மாற்றுவது வழக்கம்.
தமிழக அமைச்சர்கள் சிலர் மீது கோஷ்டி பூசல், அதிக வசூல், அடாவடி வசூல், அரசு நலத்திட்டங்களில் அலட்சியம், துறை செயல்பாடுகளில் மைனஸ் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அணி வகுத்து வருகின்றன. இந்த தகவலை தகுந்த ஆதாரத்துடன் உளவுத்துறை போலீசார் மூலம் முதல்வர் உறுதிபடுத்திக் கொண்டு அமைச்சரவையை மாற்றி அமைத்து வருவதாக கூறப்படுகின்றது.
கடந்த சில மாதங்கள் முன்பே தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என செய்திகள் ரெக்கை கட்டி பறந்தது. ஆனால் அது போல் எதுவும் நடக்கவில்லை. அந்த முயற்சியை சிறிது காலம் ஜெயலலிதா தள்ளிப் போட்டாராம். அவர் எதிர்பார்த்த அளவு சில அமைச்சர்களின் நடிவடிக்கை இல்லை என்பதால் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் பறிக்கப்படும் என கூறப்பட்டது.
இதையடுத்து தமிழக அமைச்சர்களில் கோலகுல இந்திரா, சிவபதி, டாக்டர் விஜய் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்ற தகவல் தீயாக பரவி வருகின்றது.
தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள பெரும்பான்மை சமூகத்தை கணக்கில் கொண்டு மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளதாம். இதனால் தமிழக அமைச்சர்கள் கிலியில் உள்ளனர்.